சென்னையை அடுத்துள்ள பெருங்குடி பகுதியில் அடகுக் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் என்பவரின் மனைவி சென்னிதேவி (43). இவர்களது 18 வயது மகன் ராகேஷ், பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்ததால் பெற்றோர் கண்டித்ததில் மனவுளைச்சலில் இருந்துள்ளார். பாபுலால் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் சென்னிதேவியை, ராகேஷ் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் உலக்கையால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தினரை நம்பவைப்பதற்காக “யாரோ அம்மாவைக் கொன்றுவிட்டார்கள்” என அலறித் துடித்து நாடகமாடியுள்ளார்.
தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் காவல்துறையினர் சென்னிதேவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராகேஷ் மற்றும் அவரது தங்கையிடம் விசாரணை நடத்தியதுடன், வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்தன்று அதிகாலையில் ராகேஷ் பதற்றத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவரும் காட்சிகள் பதிவாகியிருந்ததே தவிர, வேறு எந்த நநபரும் வீட்டிற்குள் சென்று வரவில்லை என்பது உறுதியானது. இதனால் ராகேஷ் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் தாயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கொலையாளி ராகேஷைக் கைது செய்த போலீசார், குற்றத்திற்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் உலக்கையைக் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
