நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல்…! “இவர்களுக்கு யார் பதில் சொல்வது…?” இயக்குநர் இரா.சரவணன் ஆவேசம்…!!

By Devi Ramu on சித்திரை 24, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், வேங்கைவயல் கிராம மக்கள் இந்தத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரில் மலம் கலக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில் தங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி, அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் வாக்களிக்க முன்வரவில்லை. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள இயக்குநர் இரா.சரவணன், ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடும் வேளையில், ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தலைப் புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்தபோதே, அரசு அதிகாரிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ அவர்களைச் சந்தித்து முறையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என இரா.சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். தங்களின் 40 குடும்பங்களின் வாக்குகள் யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை என அந்தப் பகுதி இளைஞர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 85 சதவீத வாக்குப்பதிவு என்பது மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்பட்டாலும், நீதிக்காகப் போராடும் அந்த மக்களின் விரல்களில் மை படாதது இந்தத் தேசத்தின் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.