தமிழ் சினிமா உருவாக்கிய மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் எஸ் வி ரங்காராவ். ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் பிசிறு தட்டாமல் பேசி நடிக்கக் கூடியவர். தன் இளம் வயதிலேயே முதிய கதாபாத்திரங்களாக அவருக்கு அமைந்துவிட்டன. அதனால் அவரை வயதான நபராகவே ரசிகர்கள் மனதில் பதியவைத்துவிட்டனர் தமிழ் சினிமா இயக்குனர்கள்.
தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்து வந்த எஸ் வி ரங்காராவ் மிகச்சிறந்த நடிகராக இருந்த போதும் அவரை வைத்து ஷூட் செய்வது அவ்வளவு எளிதில்லையாம். பயங்கர கோபக்காரரான அவர் பல இடைஞ்சல்களை படக்குழுவினருக்குக் கொடுப்பாராம். அதில் முக்கியமான ஒன்று வெளிப்புற ஷூட்டிங்குக்கு அவர் வரமாட்டாராம்.

Directors krishnan panju
ஆனால் அவரின் இந்த பிடிவாதம் தமிழ் சினிமாவின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவிடம் பலிக்கவில்லையாம். அவர்கள் இயக்கிய அன்னை என்ற திரைப்படத்தில் ரங்காராவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதில் ஒரு குறிப்பிட்ட காட்சியை வெளிப்புறத்தில் எடுத்தால்தான் சரியாக வரும் என முடிவு செய்துள்ளனர் இயக்குனர்கள்.
அதனால் அதற்கான வேலைகளை செய்துவிட்டு எஸ் வி ரங்காராவுக்கு தகவல் சொல்லியுள்ளனர். ஷுட்டிங் தொடங்கிய பின்னரும் அவர் வரவில்லையாம். அதன் பிறகுதான் இயக்குனர்களுக்கு விஷயம் புரிந்துள்ளது. அதனால் கோபமான இயக்குனர் பஞ்சு “இன்னும் அரைமணி நேரத்தில் அவர் இங்கு வரவில்லை என்றால் அவர் கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை வைத்து படம் எடுக்கவும் தயங்க மாட்டேன்.” என செய்தியனுப்பியுள்ளார்.
இதைக் கேட்டு பதற்றமான ரங்காராவ் உடனே ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்துள்ளார். மேலும் இயக்குனர் பஞ்சு அவரிடம் “ஒரு இயக்குனர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன் படி நடித்துக் கொடுக்க வேண்டியதுதான் நடிகரின் கடமை. ஒரு காட்சியை எங்கு எடுக்கவேண்டும் என்பதை இயக்குனர்தான் முடிவு செய்யவேண்டும். நடிகர் இல்லை” என அறிவுரை செய்து மாஸ் காட்டியுள்ளார். அந்த காலத்தில் திரைப்படத்துறையில் இயக்குனர்களுக்கு அவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது.