சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிற ஒரு விஷயம், நடிகர் ரஜினிகாந்த் பேரன், நடிகர் தனுஷ் மகன், ஆர்15 பைக்கை ஓட்டிச் சென்ற விவகாரம்தான். 17 வயதான அவர் பைக்கை ஓட்டிச் சென்ற பிரச்னையை பெரிதுபடுத்திய சமூக வலைதளங்களால், போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு பிரச்னை சென்றுவிட்டது. நம் வீட்டு பக்கத்தில், அடுத்த வீதிகளில், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் 18 வயது நிரம்பாத பலர் டூவீலர், கார்களை ஓட்டிப் பழக பயிற்சி எடுப்பதை பலரும் பார்த்திருப்பர். ஆனால் உடனே அவர் மீது யாரும் புகார் சொல்வதில்லை. ஆனால் பிரபல நடிகரின் மகன், பேரன் என்ற காரணத்தால் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகிறது. போயஸ் கார்டனில் உள்ள தனது தாத்தா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்ட பேரன் லிங்கா, 2 வீதிகள் தள்ளியுள்ள தனது தந்தை தனுஷ் வீட்டுக்குதான் சென்றிருக்கிறார். அதுவும் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சென்ற அவருடன் பவுன்சர் ஒருவரும் துணைக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வீதி வழியாக ஏதேச்சையாக சென்ற டிவி சேனல் ஒன்று, பவுன்சருடன் தனுஷ் மகன் லிங்கா பைக்கில் செல்வதை பார்த்து வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். அதை மீடியாக்களில் இப்போது பரவ விட, பிரச்னை வைரலாகி விட்டது.
இதையடுத்து, 17 வயதான சிறுவன் லிங்கா விதிமுறை மீறி பைக் ஓட்டியதற்காக போக்குவரத்த போலீசார் ரூ. ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு ரூ. 5 ஆயிரம், லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டியதற்கு ரூ. ஆயிரம் என 6 ஆயிரம் ரூபாய் வசூலித்திருக்க வேண்டும் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. தீபாவளி டிஸ்கவுண்ட் ஆக ரூ.5 ஆயிரம் குறைக்கப்பட்டதா எனவும் கலாய்த்து வருகின்றனர். தாத்தா வீட்டில் இருந்து, 2 வீதி தள்ளியுள்ள அப்பா வீட்டுக்கு பைக்கில் சென்றது குற்றமா, இதையெல்லாமா இப்படி விவகாரமாக்குவார்கள் என்பதுதான் பலரது கமெண்ட் ஆக உள்ளது.