72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இணையதளம் முழுக்க நடிகர் தனுஷின் பெயர்தான் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ‘ராயன்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதையும், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் தனுஷ் வென்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதேவேளையில், சில தரப்பினர் “ஏற்கனவே இரு விருதுகள் பெற்ற அவருக்கு மீண்டும் இவ்விருதுகளா?” எனக் கேள்வி எழுப்பி வரும் சூழலில், சமூக வலைத்தளங்களில் அவரைச் சுற்றி ஒரு புதிய அரசியல் வதந்தியும் வேகமெடுத்துள்ளது.
அதாவது, தனுஷ் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறாரா என்ற பேச்சுக்கள் பரவி வருகின்றன. இதற்குப் பின்னணியில் எந்தவொரு பெரிய அரசியல் மேடைப் பேச்சோ அல்லது ஆலோசனையோ இல்லை; மாறாக ஒரே ஒரு ‘எக்ஸ்’ பதிவே காரணமாக அமைந்தது. தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் விஜய்யின் பதிவிற்கு, “Thank you Hon’ble Chief Minister” என்று தனுஷ் மரியாதையுடன் பதில் அளித்திருந்தார். இந்த ஒரு பதிலை மட்டுமே வைத்துக்கொண்டு, சிலர் விஜய் கூப்பிட்டுவிட்டார், தனுஷ் தவெக-வில் இணையப்போகிறார் எனத் தாங்களாகவே கதைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.
உண்மையில், முதல்வர் விஜய்க்கு மட்டுமல்லாமல், தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அவர் தனித்தனியாக நன்றி தெரிவித்திருந்தார். தன் மீது அன்ப செலுத்திய அனைவருக்கும் மரியாதை நிமித்தமாகவே அவர் பதில் அளித்தார். ஆனால், விஜய் பதிவிற்கு அளித்த பதிலை மட்டும் பிரித்தெடுத்துப் பேசி வரும் வதந்திகளுக்குத் தனுஷ் ரசிகர்கள் கடுமையான மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், தனுஷ் போன்ற பான்-இந்தியா நடிகர் தங்கள் கட்சியில் இணைந்தால் பலமாக இருக்கும் என விஜய் ரசிகர்களில் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில், விஜய் தரப்பில் இருந்து தனுஷிற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அழைப்பும் விடுக்கப்படவில்லை; தனுஷ் தரப்பிலும் அரசியலில் இணைவது குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே சமீபத்தில் தனுஷ் ரசிகர் மன்றக் கொடி மறுவடிவமைப்பு செய்யப்பட்டபோதும் அவர் அரசியலுக்கு வருவதாக வதந்திகள் எழுந்தன. ஒருபுறம் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் தனுஷ் இருந்தாலும், அவரைச் சுற்றி இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகள் தொடர்கின்றன. இதனால், தன் மீதான விமர்சனங்களுக்கும் இந்த அரசியல் வதந்திகளுக்கும் தனுஷே விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
