“நான் தான் ஆட்சியையே காப்பாற்றினேன்.. எனக்கே இந்த நிலைமையா?”… எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்த முன்னாள் சபாநாயகர் தனபால்…!

By Nanthini on சித்திரை 2, 2026

Spread the love

முன்னாள் சபாநாயகரும், அவிநாசி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவுமான தனபால், அதிமுக தலைமை மீது சுமத்தியுள்ள பரபரப்பு குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் காப்பாற்றியது நான்தான் என்று குறிப்பிட்டுள்ள அவர், அத்தகைய விசுவாசத்தைக் காட்டிய தனக்கே தற்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

தனபால் தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய ஆதங்கம் என்னவென்றால், அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தகவல் கூட முறையாகத் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதுதான். சிட்டிங் எம்எல்ஏ மற்றும் முன்னாள் சபாநாயகர் என்ற முறையில் தனக்கு அளிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச மரியாதையைக்கூட கட்சித் தலைமை வழங்கவில்லை என்றும், அவிநாசி பறிபோன நிலையில் மாற்றுத் தொகுதி குறித்துக்கூட எவரும் தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

   

மறுபுறம், தனபாலுக்கு சீட் மறுக்கப்பட்டதற்குப் பின்னணியில் பல்வேறு கள யதார்த்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு நிலவும் உடல்நலக் குறைவு காரணமாகத் தொகுதிப் பக்கம் அவர் வருவதில்லை என்ற அதிருப்தி மக்களிடையே நிலவி வந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவிநாசி தொகுதியைக் குறிவைத்த போதிலும், அவருக்கு எதிராகக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியதால் தலைமை பின்வாங்கியதாகத் தெரிகிறது.

   

இந்த அதிருப்தியின் உச்சகட்டமாக, தனது தந்தைக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய லோகேஷ் தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். அவர் தற்போது ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் நிலையில், தனபாலின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு கொங்கு மண்டல அதிமுகவினரிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. பல ஆண்டுகாலம் விசுவாசமாக இருந்த ஒரு மூத்த தலைவரின் இந்த ஆதங்கம் வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.