புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த பரிதாபச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடி அருகிலுள்ள அரையபட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான லோகநாதன் என்பவர் சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி சத்யாவிற்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 56 நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், தனது குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைப்பதற்காக, லோகநாதன் வீட்டில் இருந்த டேபிள் ஃபேனின் பிளக்கை சாக்கெட்டில் சொருகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மிகக் கடுமையான மின்சாரம் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்த ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து சில நாட்களே ஆன தன் குழந்தைக்குக் காற்றுக்காக மின்விசிறி போடச் சென்ற தந்தை பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
