ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரசேனாவின் மகள் சவுதேஸ்வரி, தனது உறவினர் வீட்டுக்கு வந்த நாகராஜு என்பவரைக் காதலித்துள்ளார். இந்த காதலுக்கு தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சவுதேஸ்வரிக்கு ஒரு அரசுப் பள்ளி ஆசிரியருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால், காதலைக் கைவிடாத சவுதேஸ்வரி, வீட்டை விட்டு வெளியேறி நாகராஜுவைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாகக் காவல் நிலையத்தில் பொய்ப் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் சவுதேஸ்வரி திருடவில்லை என்பது உறுதியானது. இருப்பினும், “மகள் ஐந்து நாட்கள் வீட்டில் தங்கிவிட்டுப் போகட்டும்” என்று போலீசாரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு, சந்திரசேனா தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கடந்த மாதம் 19-ஆம் தேதி கணவர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையில், அதற்கு முதல் நாள் தனது மனைவி மற்றும் மகனைத் திட்டமிட்டு விவசாய நிலத்திற்கு அனுப்பி வைத்தார். வீட்டில் மகள் மட்டும் இருப்பதை உறுதி செய்துகொண்டு தனது கொடூரத் திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கினார்.
கடந்த மாதம் 18-ஆம் தேதி நள்ளிரவில், தனது உறவினர் பால சீனுவுடன் இணைந்து, தூங்கிக் கொண்டிருந்த சவுதேஸ்வரியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினார். தன்னை விட்டுவிடுமாறு தந்தை என்று கூடப் பாராமல் சவுதேஸ்வரி உயிருக்குப் போராடி கெஞ்சியுள்ளார். ஆனால், சாதி மற்றும் கௌரவம் கண்ணை மறைக்க, ஈவு இரக்கமின்றி மகளைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தனர். பின்னர், இது தற்கொலை போலத் தெரிவதற்காக மகளின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடினர்.
தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகராஜு அளித்த புகாரின் பேரில், சவுதேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மூச்சடைக்கச் செய்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. போலீசார் சந்திரசேனாவை பிடித்து விசாரணை நடத்தியதில், கௌரவத்திற்காக மகளைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சந்திரசேனா மற்றும் அவருக்கு உதவிய பால சீனு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
