டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இன்று இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் தேவையில்லாத காரணங்களுக்கு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் டிசம்பர் 2 நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களில் மழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
