“காப்பாத்தாதீங்க” குழந்தையை ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்ட கொடுரத்தாய்… பயணிகள் காப்பாற்றும்போது தடுத்ததால் அதிர்ச்சி… வெளியான பரபரப்பு பின்னணி..!!

By Muthu Mani on பங்குனி 20, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில், பெற்ற மகளையே ஓடும் ரயிலின் முன் தாய் தள்ளிவிட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வேளாண்மைத் துறையில் எழுத்தராகப் பணிபுரியும் அஞ்சு சிங் ராஜ்புத் என்ற பெண், தனது 8 வயது மகள் யுவிகாவுடன் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இரவு சுமார் 8:00 மணியளவில் 1-ஆம் எண் நடைமேடையில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாகக் கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாகத் தனது மகளைத் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய சிறுமியைக் கண்டு அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓடி வந்துள்ளனர்.

சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்களும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (RPF) விரைந்து செயல்பட்டு, ரயிலின் அடியில் சிக்கியிருந்த சிறுமியை மீட்டனர். காயமடைந்த சிறுமியை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குள்ள மக்கள் தன்னைக் காப்பாற்ற முயன்றபோது, அந்தத் தாய் “என்னை ஏன் காப்பாற்றினீர்கள்?” என்று மீண்டும் மீண்டும் ஆக்ரோஷமாகக் கேட்டது அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனநலக் குறைபாட்டிற்காகச் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

   

தற்போது சிறுமி யுவிகாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ரயிலில் அடிபட்டதில் தலையின் பின்பகுதி, இடுப்பு மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாகச் சிறுமியின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளதால், அவர் போபாலில் உள்ள ஒரு உயர்தர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) செயற்கை சுவாசக் கருவியின் (Ventilator) உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் குழு சிறுமியின் உயிரைக் காக்கப் போராடி வருகின்றனர்.

   

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறை (GRP) அந்தத் தாய் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர் குழந்தையுடன் ரயில் நிலையத்தில் உலாவிக் கொண்டிருந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனநலப் பாதிப்பே இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், ஒரு அரசுப் பணியில் இருக்கும் தாயே தனது குழந்தையைத் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.