கூட்டுறவு வங்கிகளில் அதிரடி மாற்றம்…. இனி பயிர்க்கடன் வாங்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டாம், ஒரே நாளில் பணம்… தமிழக அரசு குட் நியூஸ்…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்கும் நடைமுறையில் தமிழக அரசு மிக முக்கியமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இனிவரும் காலங்களில், தகுதியுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் கோரி விண்ணப்பிக்கும் அதே நாளிலேயே கடன் தொகை வழங்கப்பட வேண்டும் என கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்த்து, சாகுபடி காலத்திற்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த அதிரடி மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த புதிய நடைமுறையின்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் ஆவணங்கள் உடனடியாகச் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விவசாயிகளுக்கு அன்றைய தினமே கடன் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக, பயிர்க்கடன் ஒப்புதல் பெறுவதற்கு விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த வெளிப்படையான மற்றும் விரைவானச் செயல்முறை, விவசாயிகளின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், கந்துவட்டிக் கொடுமையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.