கிரெடிட் கார்டு பில் தொகையைச் செலுத்துவதில் தாமதம் செய்பவர்களுக்கு உதவும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, பில் செலுத்துவதற்கான கடைசி தேதி முடிந்த பிறகும், கூடுதலாக 3 நாட்கள் வரை பயனர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்படும். பொதுவாக கடைசி தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இனி இந்த புதிய விதியின் கீழ் 3 நாட்கள் வரை எவ்வித அபராதமும் இன்றி பயனர்கள் தங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்திக் கொள்ளலாம்.
இந்த 3 நாட்கள் சலுகைக் காலத்தில் பில் தொகையைச் செலுத்துபவர்களின் சிபில் ஸ்கோரும் (CIBIL Score) பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. தவறுதலாகவோ அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ கடைசி நேரத்தில் பணம் செலுத்த முடியாதவர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும். இந்த புதிய நடைமுறையானது 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கூடுதல் நிதிச் சுமையிலிருந்தும், கடன் மதிப்பீடு குறைவதிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.
