தமிழக அரசியல் களம் தற்போது ‘தவெக’ஆட்சி நீடிப்பது யாரால்?’ என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தன. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தர, இதர கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், தவெக அரசு தங்களது தயவால்தான் நீடிக்கிறது என்று திமுக விமர்சித்து வந்த சூழலில், அதற்கு முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், “இந்த ஆட்சி திமுகவின் தயவால் நடைபெறவில்லை; மக்கள் தயவாலும், மனசாட்சியுள்ள சக்திகளின் ஆதரவாலும் மட்டுமே நடைபெறுகிறது,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், “நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று சொல்பவர்கள், அப்படி அனுப்பி வைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தவுடன் ஏன் கதறுகிறார்கள், ஏன் இவ்வளவு கோபம்?” என்று திமுகவினரை நோக்கிக் கேள்வி எழுப்பினார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளித்தது அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் விஜய்யின் இந்த ஆவேசப் பேச்சைக் கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
முதல்வர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளார். “நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்காமல் போயிருந்தால், கடந்த மே 10-ஆம் தேதி தவெகவின் பதவியேற்பு விழாவே நடந்திருக்காது,” என்று அவர் ஓப்பனாகப் பேசியுள்ளார். மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், தவெக அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்ததாலும்தான் தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய பெ. சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்கத் தவறியிருந்தால் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டினார். “பாஜக தமிழகத்தில் காலூன்றக் கூடாது என்பதற்காகவும், மறைமுகமாக குடியரசுத்தலைவர் ஆட்சி வருவதைத் தடுப்பதற்காகவுமே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற முடிவை எடுத்தோம்; இது எங்களின் தெளிவான அரசியல் நிலைப்பாடு,” என்று அவர் கூறினார். முதல்வர் விஜய்யின் முழுப் பேச்சையும் பார்த்த பிறகு இது குறித்து விரிவாகப் பதிலளிப்போம் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
