BREAKING: செந்தில் பாலாஜிக்கு அடுத்த ஷாக்…. ரூ.397 கோடி முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!

By Nanthini on சித்திரை 30, 2026

Spread the love

தமிழக மின்வாரியத்தில் கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுமார் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்காலத்தில் நடைபெற்ற இந்த கொள்முதலில் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக அதிமுக சரவணன் மற்றும் அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தில் டான்ஜெட்கோ நிர்வாகம் லாபகரமான கொள்முதல் என்று வாதிட்டாலும், ஆரம்பத்திலிருந்தே பல்வேறு முரண்பாடுகள் நீடித்து வந்தன.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, முறைகேடு புகார்கள் எழுந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தியது மற்றும் உண்மையை மறைக்க முயற்சிகள் நடந்திருக்கலாம் என்ற நீதிமன்றத்தின் சந்தேகம் வழக்கின் தீவிரத்தை உணர்த்துகிறது. முறையான விசாரணை நடத்தாமல் அதிகாரிகள் தரப்பில் காட்டப்பட்ட மெத்தனம் மற்றும் தாமதம் சட்ட ரீதியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

   

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இந்த வழக்கை கையாண்ட விதம் குறித்து நீதிமன்றம் முக்கிய விமர்சனங்களை முன்வைத்துள்ளது. முதலில் விரிவான விசாரணைக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், பின்னர் அது ஆரம்பகட்ட விசாரணையாகக் குறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், குற்றச்சாட்டில் தொடர்புடைய பலரை விடுத்து, ஒருவரை மட்டும் மையப்படுத்தி விசாரணை நடத்தியது மற்றும் போதுமான சான்றுகள் இருந்தும் வழக்கு பதிவு செய்யத் தயங்கியது விசாரணையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

   

இறுதியாக, இந்த முறைகேடு புகாரில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அனைத்து ஆவணங்களையும் இரு வாரங்களுக்குள் ஒப்படைக்க மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்காக அல்ல என்றும், உண்மையை முழுமையாக வெளிக்கொணரவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சிபிஐ விசாரணை தொடங்குவதன் மூலம், மின்மாற்றி கொள்முதல் விவகாரத்தில் விரைவில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.