“நீ இல்லாத உலகில் நானும் இல்லை”… திருமணமான ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உயிரை மாய்த்த காதல் ஜோடி… தற்கொலைக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி…!!!

By Muthu Mani on வைகாசி 12, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலி மற்றும் வினய் ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாகக் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், திருமணமான சில நாட்களிலேயே அஞ்சலி செல்போனில் நீண்ட நேரம் பேசுவதாக வினய் சந்தேகப்பட்டதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கடந்த 7-ம் தேதி ஆத்திரமடைந்த வினய் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வினய் தனது மனைவியைச் சமாதானம் செய்ய பலமுறை முயன்றும் அஞ்சலி கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வினய் செய்த அழைப்புகளை அஞ்சலி ஏற்காததால், கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத்தில் வேலையை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த வினய்க்கு, ராயபுரம் கிராமம் அருகே வந்தபோது தனது மனைவி உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது.

   

மனைவியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வினய், தனது தந்தையிடம் போனில் கதறி அழுதுள்ளார். பின்னர், தான் இருக்கும் இடத்தின் ‘லொகேசனை’ தனது நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவிட்டு, அங்கிருந்த மரத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட ஒரே மாதத்தில், சந்தேகத்தால் ஏற்பட்ட மோதலில் புதுமணத் தம்பதிகள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.