தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் கடந்த 1980களில் வில்லனாக அறிமுகமானவர். பிறகு பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் படத்தில் நாயகனாக மாறினார். பிறகு பல வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்த அவர் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது பெயருக்கு முன்னால் புரட்சித் தமிழன் சத்யராஜ் என்றும் படங்களில் டைட்டில் கார்டில் போடப்படுகிறது.
பகுத்தறிவு பேசும் நடிகர் சத்யராஜ் கடவுள் மறுப்பாளர் என்றும் பெரியார் கொள்கைகளை பின்பற்றும் ஒரு நாத்திகவாதியாகவும் தன்னை வெளிப்படுத்தி கொள்பவர். திமுக ஆதரவாளராகவும் அவர் இருந்து வருகிறார். மேலும் இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய பல படங்கள் நடித்த சத்யராஜ் தொடர்ந்து கடவுள் மறுப்பு கூட்டங்களில் பங்கேற்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆந்திராவில் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா நடித்த சீதா பயணம் என்ற படத்தின் விழா நடந்தது. இந்த விழாவில் தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தத்திற்கு நடிகர் சத்யராஜ் ராமர் சிலையை பரிசாக வழங்கினார். இதை பார்த்த பலரும் தமிழ்நாட்டில் நாத்திகம் ஆந்திராவில் ஆத்திகமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
