தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், கட்சியின் தனித்தன்மையை விட திமுகவின் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கட்சிக்குள்ளேயே அதிருப்தி கிளம்பியுள்ளது. குறிப்பாக, தொகுதிப் பங்கீட்டில் டெல்லி தலைமை எதிர்பார்க்கும் இடங்களை திமுக வழங்க மறுக்கும் நிலையில், செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது.
இந்த அதிரடி மாற்றத்திற்காக முன்னாள் எம்.பி. செல்லக்குமார் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். செல்வப்பெருந்தகைக்கு மாற்றாக, திமுகவிடம் சமரசம் செய்து கொள்ளாத பிம்பம் கொண்ட செல்லக்குமாரிடம் தமிழக காங்கிரஸின் கடிவாளத்தை ஒப்படைக்க ராகுல் காந்தி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிந்தால், கட்சியைத் துணிச்சலாகவும் தனித்தும் வழிநடத்த செல்லக்குமாரே சரியான நபர் என்று டெல்லி தலைமை கருதுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டால், அது திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான பல ஆண்டு கால கூட்டணியில் பெரும் விரிசலை உண்டாக்கும் எனக் கணிக்கப்படுகிறது. திமுக எடுக்கும் முடிவுகளுக்கு ‘ஆமாம் சாமி’ போடாமல், கட்சியின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தலைவர் தேவை என்பதே டெல்லியின் தற்போதைய கணக்காக உள்ளது. இதனால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தால், கூட்டணி உடையும் சூழல் உருவாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தத் தலைமை மாற்ற முயற்சி சத்தியமூர்த்தி பவனில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் இந்த நகர்வுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைவரை மாற்றினால் கட்சி இரண்டாக உடைய வாய்ப்புள்ளதாகவும், அது தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். டெல்லி மேலிடத்தின் இந்த ‘அதிரடி’ முடிவு தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
