ஸ்டாலினின் “பவர்” ஷேரிங் பாலிசிக்கு ஆப்பு…. 50 சீட் டிமாண்ட்.. திமுகவை பதறவைத்த ராகுல் காந்தியின் ரகசிய மீட்டிங்…!

By Nanthini on மாசி 11, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, அக்கட்சியின் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை திமுக கூட்டணியில் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்த காங்கிரஸ், தற்போது திமுகவை நோக்கி நேரடியாகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க திமுக தாமதம் செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாகத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டெல்லி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் பணிகளுக்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் திமுக அதற்குத் தயாராக இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். பீகார் போன்ற மாநிலங்களில் கடைசி நேரத்தில் கூட்டணி முடிவானதால் ஏற்பட்ட சிக்கல்களைச் சுட்டிக்காட்டிய அவர், சரியான நேரத்தில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டால்தான் களப்பணிகளைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்று வலியுறுத்தினார். திமுகவின் இந்தத் தாமதம் காங்கிரஸ் தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

   

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்பது என்றும், ஒருவேளை உரிய இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.

   

தமிழகத்தில் ‘கிங் மேக்கராக’ உருவெடுக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி தனது வியூகங்களை வகுத்து வருகிறது. திமுகவின் தயவிலேயே குறைந்த இடங்களில் போட்டியிடுவது கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று மேலிடத்திடம் தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர். ராகுல் காந்தியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் விபரங்களை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க உள்ளதாகக் கூறியுள்ள செல்வப்பெருந்தகை, திமுகவின் அடுத்தகட்ட நகர்விற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது வரும் நாட்களில் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.