சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சூரக்குடியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி பூச்சியம்மாள் என்பவரைக் கொன்று, அவரிடமிருந்த 10.5 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்த சாமுண்டீஸ்வரி என்பவரும், அவரது ஆண் நண்பர் சரவணனும் சேர்ந்து கடன் தொல்லையைத் தீர்ப்பதற்காக இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர். பூச்சியம்மாளை ஆசையாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, போர்வையால் முகத்தை அமுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த பிறகு சடலத்தைச் சாக்கில் கட்டி கால்வாயில் வீசிய கொலையாளிகள், சினிமா பாணியில் தடயங்களை அழிக்க விசித்திரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உடலின் மீது கிலோ கணக்கில் சர்க்கரையைத் தூவினால், எறும்புகள் வந்து கைரேகைகளையும் கால்தடங்களையும் அழித்துவிடும் என்றும், சடலம் சீக்கிரம் அழுகி துர்நாற்றம் வராது என்றும் சரவணன் நம்பியுள்ளார். மேலும், காவல்துறையைத் திசைதிருப்பச் செல்போன், செருப்புகளை வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு, ஊர் மக்களுடன் சேர்ந்து மூதாட்டியைத் தேடுவது போல் நாடகமும் ஆடியுள்ளனர்.
ஆனால், இவர்களது ‘சினிமா லாஜிக்’ நிஜ வாழ்க்கையில் கை கொடுக்கவில்லை. சடலம் கண்டெடுக்கப்பட்ட வெறும் 5 மணி நேரத்திற்குள், மோப்ப நாய், தடயவியல் குழு மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.5 சவரன் நகைகளையும் மீட்ட காவல்துறை, தப்ப நினைத்த ஜோடியைச் சிறைக்குள் தள்ளியுள்ளது.
