கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தச் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், சேலம் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுத்த உயர் நீதிமன்றம், கடந்த மார்ச் 23-ம் தேதி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், காவல்துறை விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கறாராக உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு நான்கு வார காலத்திற்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
