கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21-ஆம் தேதி மாலை 5 மணி முதல் சிறுமியைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சூலூர் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகே நேற்று மாலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த கொடூரக் குற்றம் தொடர்பாக, அதே பகுதியில் வசித்து வந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸார் கார்த்திக்கை வளைத்துப் பிடித்தபோது, அவர் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றதில் அவரது வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், குற்றவாளியான கார்த்திக் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் குடிவந்துள்ளார். திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழும் இவர், சம்பவத்தன்று சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், கைதான கார்த்திக் போதை வஸ்துகள் எதையும் பயன்படுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்கு குறித்து மேலும் பேசிய ஐஜி ரம்யா பாரதி, குற்றச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரையும் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியோடு விரைவாகக் கண்டறிந்து கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். சிறுமி எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கில் மிக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசின் உரிய நிவாரணத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
