கோவை கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இதுவரை 15 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ அல்லது அரசுக்கோ இல்லை என்றும், 3 மாதங்களுக்குள் இக்கொலை வழக்கில் விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் போதைப் பொருள் தொடர்பானது என வெளியான தகவல்களை மறுத்துள்ள அமைச்சர், இது போதைப்பொருள் சார்ந்த வழக்கு அல்ல என்றும், முழுக்க முழுக்க தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாகவே இக்கொலை நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டாமாண்டு பயின்று வந்த அமுதனின் நண்பனுக்கும், 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட இரு குழு மோதலே இத்தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களைத் தடுக்கவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
