கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கும், கொடூர கொலைகளுக்கும் ஆளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்கிற சிறப்பு மகளிர் காவல் துறையை உருவாக்கி, பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இருப்பினும், ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கோவை மாவட்டம் குனியமுத்தூரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் அரை நிர்வாண நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடற்கூறாய்வு மையத்திற்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவை அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
