தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்ற தம்பதியினருக்கு, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே நேர்ந்த ஒரு திகிலூட்டும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் கிராபி (Krabi) பகுதியில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற இந்தத் தம்பதியினர், ஒரு இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரமானச் சூழலில் சிக்கிக் கொண்டனர். தம்பதியரில் ஒருவர் திடீரென விழித்துப் பார்த்தபோது, சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு நச்சுமிக்க நாகப்பாம்பு அவரது கழுத்தைச் சுற்றியிருப்பதைக் கண்டு உறைந்து போய் உதவிக்காக அலறியுள்ளார்.
அந்த நபர் எழுப்பிய மரண ஓலத்தைக் கேட்டு ஓடிவந்த ஹோட்டல் ஊழியர்கள், அறையில் இருந்த நிலைமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சற்றும் தாமதிக்காமல் மீட்புப் பணியில் இறங்கிய ஊழியர்கள், மிகவும் லாவகமாகச் செயல்பட்டு அந்த நபரின் கழுத்தைச் சுற்றியிருந்த பாம்பை மெதுவாக அகற்றினர். ஊழியர்களின் துரிதமான மற்றும் சாதுரியமான செயலால், அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டதுடன், அந்தப் பாம்பிற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. இதைப் பார்த்த பயனர் ஒருவர், “உறக்கத்தில் இருக்கும்போது கழுத்தில் நாகப்பாம்பு இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை; இது ஒருபோதும் இனிமையான விடுமுறை நினைவாக இருக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். மற்றுமொரு பயனர் இதை ஒரு ‘கெட்ட கனவு’ என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ஹோட்டல் அறையின் தரைப்பகுதி வழியாகப் பாம்பு எப்படி உள்ளே வந்தது என்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இனிவரும் நாட்களில் அந்நிய நாட்டுப் பயணங்களின் போது ஹோட்டல்களைத் தேர்வு செய்வதில் இத்தம்பதியினருக்கு இது ஒரு ஆறாத வடுவாகவே இருக்கும்.
