ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், பள்ளி மாணவன் ஒருவனின் காலணிக்குள் நான்கு அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வங்கி மேலாளர் பிரகாஷ் என்பவரின் மகன், பள்ளி முடிந்து விளையாடிவிட்டு தனது காலணிகளை வாசலில் கழற்றிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்ததை அக்கம்பக்கத்தினர் கவனித்து எச்சரித்தனர். விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், வீடு முழுவதும் பல மணி நேரம் தேடியும் பாம்பு சிக்காத நிலையில், இறுதியில் வாசலில் இருந்த சிறுவனின் காலணிக்குள் பாம்பு சுருண்டு பதுங்கியிருந்ததைக் கண்டறிந்து அதனை லாவகமாகப் பிடித்தார்.
பிடிபட்ட அந்த நாகப்பாம்பு ஆக்ரோஷமாகப் படம் எடுத்து ஆடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் அந்தப் பாம்பு பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. உணவு மற்றும் தங்கும் இடத்தைத் தேடியே பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன என்றும், குறிப்பாக செருப்பு ஸ்டாண்ட், படிக்கட்டுகள் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற மறைவான இடங்களை அவை தஞ்சம் அடையத் தேர்ந்தெடுப்பதாகவும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.
பொதுமக்கள் தற்காப்பு நடவடிக்கையாக, காலணிகளை அணியும் முன் அவற்றை நன்கு தட்டிச் சோதிப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டைச் சுற்றி காடுகள் இருந்தாலோ அல்லது தவளைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தாலோ பாம்புகள் வர வாய்ப்பு அதிகம். எனவே, வீட்டின் நுழைவாயில் கதவுகளில் பாம்புகள் புகாதவாறு சிறிய துளைகளுடைய இரும்பு வலைகளைப் பொருத்துவது நல்லது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள வீடுகளில் காலணிகளைப் பாதுகாப்பான உயரத்தில் வைப்பதும், விழிப்புணர்வுடன் இருப்பதும் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்க உதவும்.
