தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, தமிழக முதல்வர் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அரசியல் களத்தில் இருவருக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்தச் சந்திப்பு மிகுந்த சகோதரத்துவத்துடன் அமைந்திருந்தது. சீமான் தனது வீட்டு வாசலுக்கே வந்து விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று, கைகோர்த்தபடி உள்ளே அழைத்துச் சென்றார். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, முதல்வர் விஜய்க்கு சீமான் புத்தகம் ஒன்றை பரிசாக அளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக சீமானும் அவரது கட்சியினரும் விஜய்யை மிகக்கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அந்த கசப்புகளைத் தாண்டி முதல்வர் விஜய் இத்தகையதொரு முன்னெடுப்பை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீமான் பலமுறை பொதுமேடைகளில் விஜய்யை ‘தம்பி’ என்றே உரிமையோடு குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது நேரில் சந்தித்துக் கொண்டது அந்த உறவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை முதல்வர் விஜய் வரிசையாகச் சந்தித்து வருவது, ஒரு முதிர்ச்சியான அரசியல் கலாச்சாரத்தை நோக்கித் தமிழகம் பயணிப்பதைக் காட்டுகிறது.
முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாசையும் அவரது இல்லத்தில் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது அன்புமணி விஜய்யை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றதோடு, தனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினருமான சவுமியா அன்புமணி மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் விஜய் சந்தித்துள்ளார். அரசியல் கொள்கைகள் வேறாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் காட்டும் இந்த மரியாதை தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
