தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று முறைப்படி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த அமைச்சரவையில் முன்னாள் அதிகாரிகள், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்கள் என கலவையான பங்களிப்பு காணப்படுகிறது. பதவியேற்ற அமைச்சர்களின் கல்வித்தகுதி, கிரிமினல் பின்னணி மற்றும் சொத்து விவரங்கள் தற்போது பொதுவெளியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
இந்த அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய்க்கு அடுத்தபடியாக அதிக சொத்துகளைக் கொண்டவராக வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஆதவ் அர்ஜுனா அறியப்படுகிறார். சுமார் 534 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பெரும் பணக்கார அமைச்சர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார். இதற்கு நேர்மாறாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 7.47 கோடி ரூபாய் சொத்துகளுடனும், 3.58 கோடி ரூபாய் கடனுடனும் அமைச்சராகியுள்ளார். நிர்வாகத் திறமையை முன்னிறுத்தி அமைச்சராக்கப்பட்ட முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் 12 கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்டுள்ளார். இவர்களில் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் 15.72 கோடி ரூபாய் சொத்துகளுடன் தனது அனுபவத்தை அமைச்சரவைக்கு வழங்க உள்ளார்.
மற்ற அமைச்சர்களைப் பொறுத்தவரை, தவெக பொருளாளர் வெங்கட ரமணன் 5.40 கோடி ரூபாய் சொத்துகளையும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சி.டி.ஆர் நிர்மல்குமார் 26 கோடி ரூபாய் சொத்துகளையும் கொண்டுள்ளனர். எழும்பூர் தொகுதியில் வென்ற ராஜ்மோகன் 2 கோடி ரூபாய் சொத்துகளுடனும், காரைக்குடியில் சீமானை வீழ்த்திய டாக்டர் பிரபு 11.39 கோடி ரூபாய் சொத்துகளுடனும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கோடீஸ்வரர்களாக இருக்கும் வேளையில், அமைச்சரவையின் சராசரி சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டுகிறது.
இருப்பினும், இந்த ‘கோடீஸ்வர அமைச்சரவையில்’ ஒரே ஒரு நபர் மட்டும் மிக எளிமையான பின்னணியுடன் அமைச்சராகப் பதவியேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி வெற்றி பெற்ற எஸ். கீர்த்தனா தான் அந்த நபர். முதுகலை பட்டதாரியான இவருக்கு வெறும் 22 லட்சம் ரூபாய் மட்டுமே சொத்து உள்ளது. அமைச்சரவையிலேயே மிகக் குறைந்த சொத்து மதிப்பைக் கொண்டவராகவும், கிரிமினல் வழக்குகள் ஏதும் இல்லாதவராகவும் கீர்த்தனா விளங்குவது தவெக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
