கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் தேக்குதோடு பகுதியில், நேற்று மாலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆறு பேர் பயணித்த ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ், சாலையில் குறுக்கிட்ட பாம்பின் மீது மோதாமல் இருக்க திடீரெனத் திருப்பியதால், நிலைதடுமாறிய ஆட்டோ சுமார் நூறு அடி ஆழமுள்ள ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
உடனடியாக அங்கிருந்த மக்கள் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், தும்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆதிலட்சுமி (7) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், விபத்து நடந்த நேரத்தில் யதுகிருஷ்ணா (4) என்ற மற்றொரு குழந்தையை மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
மருத்துவமனைக்குச் சென்ற ஆதிலட்சுமியின் பெற்றோர், யதுகிருஷ்ணாவைக் காணவில்லை என்று கதறிய பிறகே, சுமார் இரண்டு மணி நேரம் தேடுதலுக்குப் பின் யதுகிருஷ்ணாவின் உடல் ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. விபத்து நடந்த ஆரம்பத்திலேயே குழந்தையைக் கவனித்திருந்தால் காப்பாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
