நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சென்னை கோட்டை தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் தினமும் பயணிப்பதால், சுமார் 17 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் இந்த பாதிப்புகள் குறித்துப் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. மக்கள் சந்திக்கும் இந்த இன்னல்களுக்குத் தீர்வு காணும் வகையில், மாற்று ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
இதன் எதிரொலியாகவும், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கு தடையின்றி தங்களைச் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ளும் வசதிக்காகவும், தலைமைச் செயலகத்திற்கு மிக அருகில் புதிய வீட்டிற்கு மாறுவதற்கான முதற்கட்ட முன்னேற்பாடுகளில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார். விரைவில் கோட்டைக்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதிக்கு அவரது இல்லம் மாற்றப்படலாம் என்ற தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
