தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடானது மதுரையில் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தக்கால் நடும் பணியானது நடந்தது. அன்றைய தினமே மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.ஆனந்த் அனுமதி மனுவை அளித்தார். இதனை அடுத்து மாநாடு நடக்கும் இடத்தில பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் வரும் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் மாநாடு தேதியை மாற்றுமாறு தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு காவல்துறை தெரிவித்தது.
இதனையடுத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாநாடு நடத்திக் கொள்வதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தைக் காரணம் காட்டி அந்த தேதிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல் 22ஆம் தேதிக்கு ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
