CINEMA
சிவாஜி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய சந்திரபாபு… அப்படி உச்சத்தில் இருந்த மனுஷன் வீழ்ந்ததுதான் சோகம்!
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர் என்பதுதான். சந்திரபாபு வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது, நடனமாடுவது, படத்தை இயக்குவது என பல துறைகளிலும் ஜொலித்தவர்.
வெற்றிகரமான நடிகராக வலம் வந்த சந்திரபாபு, தன்னுடைய 50 வயதுக்குள்ளாகவே அகால மரணமடைந்தார். அதற்கு அவரின் மோசமான குடிப்பழக்கமே காரணம் என்று சொல்லப்படுகிறது. சந்திரபாபு நகைச்சுவை நடிகராக மக்களை சிரிக்க வைத்தாலும், அவர் வாழ்வில் அவர் சந்தித்தது பெரும்பாலும் சோகங்களே.
சினிமா வாய்ப்பு தேடிய காலங்களில் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு, அந்த வழக்கில் தனக்காக தானே வாதாடி நீதிபதியையே சிரிக்க வைத்து விடுதலை ஆனார். அதன் பின்னர் சில ஆண்டுகளிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்து, அவர் நினைத்துப் பார்க்காத அளவுக்கு புகழின் உச்சத்துக்கு சென்றார்.
அவரைப் படத்தில் புக் செய்தால் காமெடியும் பண்ணிவிடுவார், பாட்டு பாடி டான்ஸும் ஆடிவிடுவார் என தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்து வந்தனர். அப்படி பிஸியான நடிகராக இருந்த காலத்தில் அவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜி கணேசனை விட ஒரு ரூபாய் அதிகமாக சம்பளம வாங்கினார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆம், அப்படி ஒரு சம்பவமும் நடந்துள்ளது. சிவாஜி கணேசனின் 50 ஆவது படம் 1958 ஆம் ஆண்டு வெளியான சபாஷ் மீனா. அந்த படம் ஒரு காமெடி படம் என்பதால் சிவாஜிக்கு இணையான வேடம் சந்திரபாபுவுக்கு. அதனால் தனக்கு சிவாஜியை விட ஒரு ரூபாய் சம்பளம் அதிகமாக வேண்டும் எனக் கேட்டு வாங்கியுள்ளார்.
அப்படி புகழின் உச்சத்தில் லட்ச லட்சமாக சம்பாதித்தவர்தான், கடைசி காலத்தில் தன்னுடைய சொத்துகள் எல்லாவற்றையும் இழந்து சிகிச்சைக்குக் கூட காசில்லாமல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதுதான் காலம் விளையாடிய விளையாட்டு.