“உங்க வீட்ல செய்வினை இருக்கு”.. குறி சொல்வது போல் வந்து மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு.. வீதி உலா வந்த பலே ஆசாமிகள்..!!!

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனிக்கொடியின் மனைவி பாப்பா (வயது 70) என்பவர், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்தப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், குறி சொல்வது போல் நடித்து பாப்பாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தொடர்ந்து அவர் பாப்பாவிடம், “உங்கள் வீட்டில் செய்வினை கோளாறு உள்ளது, அதற்கு உடனடியாகப் பரிகாரம் செய்ய வேண்டும்” என்று கூறி நம்ப வைத்து, வீட்டிற்குள் இருந்து ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வருமாறு கேட்டுள்ளார்.

அவர் கூறியதை நம்பிய பாப்பாவும் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வர, அந்த மர்ம நபர் பாப்பாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி செம்பில் உள்ள தண்ணீருக்குள் போடுமாறு கூறியுள்ளார். அதன்படி பாப்பாவும் நகையைக் கழற்றிப் போட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் பாப்பாவைத் திடீரென கீழே தள்ளிவிட்டு செம்பில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இக்கொடூரச் சம்பவம் குறித்து கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றவாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளதால், அதனைக்கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.