ஈரான் – இஸ்ரேல் போர் சூழலால் உலகளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைச் சீரமைக்கவும் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் இருப்பு, விநியோகம் ஆகியவற்றை முறைப்படுத்த ‘அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955’-ஐ மத்திய அரசு தற்போது அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்குவது அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்த எரிவாயு தட்டுப்பாட்டினால் வணிக ரீதியான பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், உணவகங்கள் மற்றும் ஓட்டல் சேவைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. பல முன்னணி ஓட்டல்கள் கையிருப்பு தீர்ந்து வருவதால் தற்காலிகமாக மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும், இதனால் பொதுமக்களும் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைச் சமாளிக்க, வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு இடைவெளியை 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
