கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கரூரில் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகளிடம் சிபிஐ குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற மூன்று நாள் விசாரணையிலும் அவர்கள் பங்கேற்று ஆதாரங்களை வழங்கினர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனர் இடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் விஜய்க்கு சம்மன் அனுப்பி இன்று நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனி விமானத்தில் டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இன்று காலை 11 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆகிறார். இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கையாக விஜய் இடம் இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் உள்ள அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
