தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று, வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த நபர் உடனடியாகச் சாலையில் தூக்கி வீசப்பட்டு, நல்வாய்ப்பாகப் பலத்த காயங்களின்றி உயிர்தப்பினார்.
ஆனால், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல், மோட்டார் சைக்கிளைத் தனது அடியில் சிக்க வைத்துக்கொண்டு அரை கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் உரசியபடியே அதிவேகமாக இழுத்துச் சென்றுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் ஆப்பிரிக்கா அவென்யூ சாலை வழியாக அந்த காரை தீவிரமாக விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து நிறுத்தினர். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், காரை இயக்கிய 73 வயது முதியவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
