உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே உள்ள திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பைசோத் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் முன்னால் சென்ற பிற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த லாரிக்கும் மற்றுமொரு லாரிக்கும் இடையே கார் ஒன்று சிக்கி நசுங்கியதுடன், மற்றொரு கார் தீப்பற்றி எரிந்ததால் விபத்தின் தீவிரம் அதிகரித்தது.
இந்த கோர விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
