வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட பர்தா பெண்… ‘கடைசியில் நடந்த ட்விஸ்ட்’…சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!!

By Muthu Mani on சித்திரை 3, 2026

Spread the love

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளரான அகமது காதிரி, கடந்த 05.12.2025 அன்று வங்கி வளாகத்தில் கிடந்த ஒரு மணிபர்ஸைக் கண்டெடுத்தார். அதில் சுமார் 1,34,95,000 ரூபாய் மதிப்புள்ள 1156.50 கிராம் தங்க நகைகள் இருந்தன. இது குறித்து சக ஊழியர்களிடம் விசாரித்த மேலாளர், அங்கிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த பர்ஸைத் தவறவிட்டுச் சென்றதைக் கண்டறிந்தார்.

நகைகளைத் தேடி ஐந்து நாட்களாகியும் யாரும் வராத நிலையில், மேலாளர் அகமது காதிரி இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு (EDF-3) போலீஸாரிடம் புகாரளித்தார். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த நகைகளைத் தவறவிட்டது அதே வங்கியில் முன்னர் பணியாற்றிய பத்மபிரியா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

   

பத்மபிரியா மீது ஏற்கனவே அந்த வங்கியின் லாக்கரில் இருந்த வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடியதாக மத்திய குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் இருப்பதும், அந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது. தான் திருடிய நகைகளை யாருக்கும் தெரியாமல் மீண்டும் வங்கி லாக்கரிலேயே வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், தன்னை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக பர்தா அணிந்து பத்மபிரியா வங்கிக்கு வந்துள்ளார்.

   

வங்கிக்கு வந்த பத்மபிரியாவால் திட்டமிட்டபடி நகைகளை லாக்கரில் வைக்க முடியாததால், பதற்றத்தில் அவற்றை வங்கியிலேயே விட்டுச் சென்றுள்ளார். கிளை மேலாளர் அளித்த புகாரால் பத்மபிரியாவின் இந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டு, அவர் மீண்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தற்போது வங்கி அதிகாரிகளுடன் இணைந்து பத்மபிரியாவின் பின்னணி மற்றும் அவர் செய்துள்ள இதர முறைகேடுகள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.