மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ‘காசி மாணவர்கள் சங்கம்’ சார்பில் நடத்தப்பட்ட கருப்புக் கொடி மோட்டார் சைக்கிள் பேரணியின் போது திடீரென வன்முறை வெடித்தது. அப்போது அங்கு சுற்றுலா வந்த அஸ்ஸாம் மாநிலப் பதிவெண் கொண்ட வாகனம் ஒன்றை போராட்டக்காரர்கள் மறித்து, அதன் கண்ணாடிகளை இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கினர். வாகனத்திற்குள் சிறு குழந்தை உட்பட குடும்பத்தினர் அச்சத்துடன் அலறிய நிலையிலும், ஓட்டுநர் சுதாகரித்துக்கொண்டு வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பியோடினார். காரின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கு வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி KSU இந்த அமைதிப் பேரணியை அறிவித்திருந்த போதிலும், அது விரைவில் வன்முறையாக மாறியது. நகரின் போலோ, பாரிக் மற்றும் மாவோலை போன்ற முக்கியப் பகுதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள், கண்ணில் பட்ட வாகனங்களை அடித்துத் தகர்த்தனர். இதில் தேசிய தகவலியல் மையம் (NIC) மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. மேலும், மாவோலையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த அரசு வாகனம் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.
வாகனங்கள் மட்டுமின்றி, பொதுச்சொத்துகள் மற்றும் சிலைகளும் இந்த வன்முறையில் சேதப்படுத்தப்பட்டன. ஆர்.ஆர். காலனியில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தர் சிலையின் கண்ணாடிப் பாதுகாப்புக் கூடு உடைக்கப்பட்டதுடன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையும் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பழங்குடியின மக்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்பு ஆகிய கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக KSU அமைப்பு எச்சரித்துள்ளது.
