ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள துக்பேரா கிராமத்தில், திருமணம் நடந்து வெறும் 13 நாட்களேயான குஷ்பு குமாரி என்ற புதுப்பெண், தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கைகளில் வைக்கப்பட்டிருந்த மருதாணி நிறம் கூட இன்னும் அழியாத நிலையில் நிகழ்ந்துள்ள இந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இறந்துபோன குஷ்புவின் சகோதரர் ரவீந்திர குமார் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், இந்தத் திருமணம் எவ்வித வரதட்சணையும் இன்றி இருவீட்டாரின் சம்மதத்துடன் மிக விமரிசையாக நடைபெற்றது என்று கூறியுள்ளார். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மணமகனின் குடும்பத்தினர் ஒரு புதிய பைக் கேட்டு குஷ்புவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியதாகவும், பைக் வாங்கித் தராத காரணத்தினால் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை போல நாடகமாட உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நவாபஜார் காவல் நிலையப் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் அடங்கிய சிறப்புக் குழு மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
