தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் கடந்த சில நாட்களாக உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் டெல்லி சென்ற அண்ணாமலை, கட்சியின் தேசிய தலைமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து தமிழகத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போகிறார் என்ற வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு நெய் வார்ப்பது போல தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.ராமலிங்கம் கருத்து தெரிவித்தார். அண்ணாமலை மாநில தலைவராக நீடித்திருந்தால் கட்சி இன்னும் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் என்று அவர் விமர்சித்தது, அண்ணாமலையின் ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்த மோதலின் அடுத்த கட்டமாக, தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு செய்தி அறிக்கை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. அதில், கட்சியின் மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இதனை சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிர்ந்து வந்தனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைமை உடனடியாக தலையிட்டு அதிகாரப்பூர்வ மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கே.பி.ராமலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மையல்ல என்றும், அந்த அறிக்கை விஷமிகளால் போலியாகத் தயாரிக்கப்பட்டு வதந்தியாகப் பரப்பப்பட்டுள்ளது என்றும் அதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய போலி அறிக்கையைத் தயாரித்து பரப்பியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக பாஜக தலைமை தெரிவித்தது.
“பிராடு அண்ணாமலை ரசிகர்கள் அடங்க வேண்டும்” – கே.பி.ராமலிங்கத்தின் ஆவேச எச்சரிக்கை
இந்த போலி அறிக்கை விவகாரத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கே.பி.ராமலிங்கம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு கடுமையான பதிவுகளை வெளியிட்டுள்ளார். தனது முதல் பதிவில், “என்னைப்பற்றி தவறாகப் பதிவிட்ட பதர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக சட்டப் பிரிவு தலைவர் குமரகுரு அவர்கள் தேசிய தலைமையின் அறிவுறுத்தல் படி புகார் அளித்துள்ளார்; வார்ரூம் சில்லுவண்டுகளுக்கு இது முதல் கட்ட எச்சரிக்கை” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு பதிவில், ஜூன் 4, 2026 தேதியிட்ட நயினார் நாகேந்திரனின் போலி அறிவிப்பை அண்ணாமலையின் ஆதரவாளர்களே வெளியிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “அண்ணாமலையின் அடிவருடிகள் வெளியிட்ட Fake அறிவிப்பிற்கு மாநில சட்டப்பிரிவு தலைவர் புகார் மனு கொடுத்துள்ளார். பிராடு அண்ணாமலை ரசிகர்கள் அடங்க வேண்டும், இல்லையென்றால் அடக்கப்படுவார்கள்” என மிகக் காரசாரமான வார்த்தைகளால் கே.பி.ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழக பாஜகவிற்குள் நிலவும் உச்சகட்ட நிழல் யுத்தத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
