சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரில், சுமார் 5.04 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சிறுவர்கள் சிலர் விளையாட்டாகச் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான சிகப்பு நிற ‘ஃபெராரி 488 ஜிடிபி’ காரை, அப்பகுதியைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் சேர்ந்து பாழாக்கியுள்ளனர். காரின் உரிமையாளர் தனது பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, கார் சேதமடைந்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சிறுவர்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியைச் சறுக்கு பலகை போலப் பயன்படுத்தியும், கைகளில் மூங்கில் கம்புகளை வைத்தும் விளையாடியது தெரியவந்தது. இவர்களின் இந்த விபரீத விளையாட்டால் காரின் ஹுட், கூரை மற்றும் பம்பர் ஆகியவற்றில் கடுமையான கீறல்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஆடம்பர காரின் சேதங்களை முழுமையாகச் சரிசெய்யச் சுமார் 95 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களின் பெற்றோரோ வெறும் 4.75 லட்சம் ரூபாய் மட்டுமே தர முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினரின் முன்னிலையில் இருமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. சிறுவர்களின் பெற்றோர் முழுமையான இழப்பீட்டை வழங்க மறுத்ததோடு, தவறு செய்த சிறுவர்களும் தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த காரின் உரிமையாளர், பேச்சுவார்த்தையைக் கைவிட்டு, முழு பழுதுபார்ப்புச் செலவையும் சட்டப்பூர்வமாக வசூலிப்பதற்காகச் சிறுவர்களின் பெற்றோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
