நெல்லையிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது, திண்டுக்கல் அருகே மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தண்டவாளப் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்தச் சிறுவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, விளையாட்டாக ரயிலின் மீது கற்களை வீசியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். ரயிலின் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றத்திற்காக அந்த இரு சிறுவர்களையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ள ரயில்வே போலீசார், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததில் பயணிகளுக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படாதது ஆறுதலைத் தந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
