திருப்பூர் மாவட்டம் சாமலாபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அன்னூர் அருகே உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து சொக்கம்பாளையம் வந்த நிலையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். உடனே அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றுக்கொண்டு புறப்பட்ட வாலிபர் சோமனூரில் வந்து மது பாட்டில்கள் வாங்கியுள்ளார். பிறகு அவர் சிறுவனை சூலூர் அருகே காடம்பாடி பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்து கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்த நிலையில் தப்பி செல்ல முயன்றுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சிறுவனை கட்டையால் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். பிறகு போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவனை அழைத்துச் சென்று ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி தாக்கிய வாலிபர் யார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் ஆறாகுளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் வசந்தகுமார் (23) என்பதும் கறிக்கடையில் வேலை செய்து வரும் அவர் மது போதையில் மாணவரிடம் தகாத செயலில் ஈடுபட முயன்றதும் அதன் பிறகு மாணவன் மறுத்ததால் தாக்கியதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.
