‘நான் சாகப் போகிறேன்.. I Love You அம்மா’… நள்ளிரவில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு இளம் யூடியூபர் தற்கொலை… அதிர்ச்சி தரும் காரணம்….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல இளம் யூடியூபர் பானு கோமாளி (21), காதல் முறிவு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ஹைதராபாத்தில் தங்கியிருந்து பி.எஸ்.சி பயின்று கொண்டே பகுதிநேர யூடியூபராகச் செயல்பட்டு வந்தார். இவரது தாயார் சத்யா வரலட்சுமி தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அதிகாலை 1:30 மணியளவில், பானு தனது தாய்க்கு வாட்ஸ்அப்பில் ஒரு உருக்கமான செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “‘I Love You So Much, அம்மா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், தம்பியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். காலையில் இந்த மெசேஜைப் பார்த்த தாயார், பதற்றத்துடன் மகளைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.

   

இதையடுத்து, தாயார் தனது நண்பர் ஒருவரை பானுவின் வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் அங்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பானு மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த ராய்டுகிராம் காவல்துறையினர், பானுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

   

முதற்கட்ட விசாரணையில், பானுவுக்கும் அகில் என்ற மென்பொருளாளருக்கும் இடையே மூன்று ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்ததும், சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே பானு இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மீட்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.