தமிழக மின் பகிர்மான கழகத்தின் சுமார் ₹30,000 கோடி மதிப்பிலான மிக முக்கிய கனவுத் திட்டமான ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு கைவிட ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலம் முழுவதுமுள்ள 3.04 கோடி மின் இணைப்புகளுக்கு 6 கட்டங்களாக மத்திய அரசின் RDSS திட்டத்தின்கீழ் இதைச் செயல்படுத்த முந்தைய ஆட்சியில் திட்டமிடப்பட்டது. எனினும், மின் வாரியத்தின் கடன் சுமையை ஆய்வு செய்த புதிய அரசு, இத்திட்டத்தால் நுகர்வோருக்கு மின்கட்டண உயர்வு போன்ற கூடுதல் சுமை ஏற்படும், இலவச மின்சாரத் திட்டங்கள் பாதிக்கப்படும் மற்றும் மின்சாரத் துறை படிப்படியாக தனியார் வசம் செல்லும் அபாயம் உள்ளது என்பதால், டெண்டர்களை திறக்காமலேயே ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஊடகங்களிடம் பேசுகையில், அரசு அவசரகதியில் எந்தவொரு முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்றும், அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆராய்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் நுகர்வோருக்கும் நன்மை தரும் பட்சத்தில் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதுள்ள ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட மேனுவல் மீட்டர் அளவீட்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது என்றும், களத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய பல நடைமுறைச் சிக்கல்கள் இதில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டம் தள்ளிப்போவதற்கு முந்தைய திமுக அரசின் அரசியல் மற்றும் லஞ்ச விவகாரங்களே காரணம் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய தவெக அரசும் அதே வழியில் பயணித்து இத்திட்டத்தைக் கைவிட்டால், இழப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு வழங்கும் சுமார் ₹5,000 கோடி நிதிச் சலுகை மற்றும் மானியங்களை தமிழகம் இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனவே, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படாமல், மாநிலத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
