அண்ணாமலைக்கு கல்தா.. எடப்பாடியின் ‘குட் புக்’கில் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு… டெல்லி கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்…!

By Nanthini on சித்திரை 3, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவான தொண்டர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “என் மண், என் மக்கள்” நடைப்பயணம் மூலம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தாமரையை கொண்டு சேர்த்த அண்ணாமலையின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறாதது, தற்செயலான நிகழ்வாகத் தெரியவில்லை. மாறாக, அண்ணாமலையின் அதிரடி அரசியலை விரும்பாத மேலிடமும், அதிமுக போன்ற கட்சிகளுடனான உறவைச் சீர் செய்ய நினைக்கும் ‘லாபியும்’ இணைந்து திட்டமிட்டே அவரை ஓரங்கட்டியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

வெளியான வேட்பாளர் பட்டியலை உற்று நோக்கினால், அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் “குட் புக்”கில் இருப்பவர்களாகவே தெரிகின்றனர். குறிப்பாக, வானதி சீனிவாசன் (கோவை வடக்கு), தமிழிசை சௌந்தரராஜன் (மயிலாப்பூர்), எல். முருகன் (அவிநாசி) எனப் பல சீனியர் முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது, அண்ணாமலையின் பிடிவாதமான ‘தனித்து போட்டி’ அல்லது ‘கடும் விமர்சன’ அரசியலுக்குக் கட்சிக்குள்ளேயே முட்டுக்கட்டை போடப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.

   

அண்ணாமலையின் தீவிரமான செயல்பாடுகளால் தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது என்ற பேச்சு பரவலாக உள்ளது. தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளுக்குப் பணிந்து, அண்ணாமலையை ஓரங்கட்டிவிட்டுப் பழைய பாணியிலான அரசியலை முன்னெடுக்கப் பாஜக மேலிடம் துணிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” போல, கட்சியைத் தூக்கிப் பிடித்த தலைவருக்கே இன்று தேர்தல் களத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கமலாலய வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

   

தன்னுடைய பெயர் விடுபட்டது குறித்து “நான் வெறும் பூத் ஏஜென்டாகப் பணியாற்றுவேன்” என அண்ணாமலை கூறியிருப்பது, அவரது தியாகமாகப் பார்க்கப்பட்டாலும், அதன் பின்னால் ஒரு காயம்பட்ட தலைவனின் சோகம் மறைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த ‘எடப்பாடி-ஃப்ரெண்ட்லி’ வேட்பாளர் பட்டியல் பாஜகவிற்கு வெற்றியைத் தேடித்தருமா அல்லது அண்ணாமலை எனும் பிம்பத்தைச் சிதைக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். எது எப்படியோ, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் இப்போது ஒரு கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது மட்டும் நிதர்சனம்.