தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எவ்வித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளும் 6 மாத காலத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் தீர்ப்பை முழுமையாக மதிக்க வேண்டும் என்றும், ஜனநாயகப் படுகொலையாகக் கருதப்படும் குதிரை பேர அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசு தனது திட்டங்களைச் செயல்படுத்தவும், மக்கள் நலப் பணிகளைத் தொய்வின்றித் தொடங்கவும் இந்த அவகாசம் அவசியமானது என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் கலந்தாலோசித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒட்டுமொத்த ஆதரவைத் திரட்ட உள்ளதாக ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் இந்த முன்னெடுப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதே அவரின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய ஆரோக்கியமான கலாச்சாரத்தை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
