மயிலாப்பூர் டூ நாகர்கோவில்…. பாஜக குறிவைக்கும் 27 இடங்கள்… சஸ்பென்ஸ் உடைத்த நயினார் நாகேந்திரன்…!!

By Devi Ramu on பங்குனி 25, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர், நாகர்கோவில், மதுரை தெற்கு உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் பாஜக களம் காண உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் களமிறங்கப் போகும் 27 வேட்பாளர்களின் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வை இறுதி செய்யும் பணிகளில் பாஜக மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வேட்பாளர் பட்டியல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பட்டியலை வெளியிடுவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தான் நாளை டெல்லி செல்லும் திட்டம் ஏதுமில்லை என்றும், அவ்வாறு டெல்லிக்குச் செல்ல நேர்ந்தால் நிச்சயமாகச் செய்தியாளர்களுக்குத் தெரியப்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக போன்ற கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ள நிலையில், பாஜகவின் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.