சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பாஜக பிரமுகரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசன் நகர் பகுதியில் செந்தில் (33) என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பீர்க்கன்கரணை மண்டல செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் பெருங்களத்தூர் ரயில் நிலைய சுரங்கப்பாதை அருகே இருசக்கர வாகனத்தில் தன்னுடைய நண்பர்களுடன் செந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் செந்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து பட்டா கத்தியால் ஓட ஓட வெட்டி உள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த செந்திலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
