உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ரா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லை என்ற காரணத்தைக் கூறி, நசாகத் 4 ஆண்டுகளுக்கு முன்பு நேகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கும் 2 மகள்கள் பிறந்த நிலையில், நசாகத் தனது முதல் மனைவியையும் இரு மகள்களையும் கண்டுகொள்ளாமல், இரண்டாவது மனைவியுடன் மட்டும் வாழத் தொடங்கினார். குடும்பச் செலவுக்கும் பணம் தராததால் பாதிக்கப்பட்ட முதல் மனைவி அஷ்ரா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய நிலையில், இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முகமது நசாகத், முதல் மனைவி அஷ்ரா மற்றும் இரண்டாவது மனைவி நேகா ஆகிய அனைவரையும் அழைத்து பஞ்சாயத்தார்கள் சுமார் 4 மணி நேரம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கணவர் இரு மனைவிகளையும் கைவிடக் கூடாது என்றும், அனைவரையும் சமமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது.
இறுதியில் பஞ்சாயத்து ஒரு வினோதமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, வாரத்தின் 3 நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த 3 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் நசாகத் வாழ வேண்டும்; மீதமுள்ள ஒரு நாளில் அவர் தனது விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம். மேலும், முதல் மனைவியின் குடும்பச் செலவிற்காக மாதம் 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை மூன்று பேருமே ஏற்றுக்கொண்டதை அடுத்து, அஷ்ரா காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
